ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – குரு பரம்பரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம்

முந்தைய கட்டுரையில் ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்குமுள்ள விசேஷ ஸம்பந்தத்தைப் பார்த்தோம்.

சிலர், “நமக்கும் எம்பெருமானுக்கும் இடையே ஓர் ஆசார்யன் ஏன்? எம்பெருமான் தானே நேராகவே கஜேந்த்ராழ்வான், குஹப் பெருமாள், சபரி, அக்ரூரர், க்ருஷ்ணாவதாரத்தில் காணும் கூனி த்ரிவக்ரா, மாலாகாரர் போன்றோரைக் கடாக்ஷிக்கவில்லையா?” என்பர்.

இதற்கு நம் பூர்வாசார்யர்கள் தரும் ஸமாதானம்: எம்பெருமான் தன்னிச்சையான ஸ்வதந்த்ரன், பெருங்கருணை காட்டுபவனும் அவனே, ஆகிலும் சேதனர் கர்மங்களுக்கேற்பப் பலன் தருபவனும் ஆகிறான்.  ஆகவே, இவ்விடத்தில்தான் ஓர் ஆசார்யரின் தேவை உணரப்படுகிறது, உணர்த்தப் படுகிறது. எம்பெருமான் , சேதனர் பொருட்டான தன் இடையறாத நல்லெண்ணத்தினால், சேதனர் உய்ய பல வாய்ப்பு வழிகளை ஏற்படுத்தி, ஒரு சதாசார்யனை அடைவித்து, அவ்வாசார்யர் மூலமாக ஐஹிக மோகங்களிலிருந்து விடுவித்து தன்னையும் தன் கருணையையுமே பற்றி உஜ்ஜீவனம் அடையச் செய்கிறான். பிராட்டியைப் போன்று புருஷாகாரம் செய்யும் ஆசார்யனும், எம்பெருமானிடம் தன்னை அண்டிய சிஷ்யன் உலக விஷயங்களில் இருந்து விலகியும் எம்பெருமானின் கருணையையே எதிர்நோக்கி உள்ளான் என்பதையும் உறுதிபடுத்துகிறார்.

எம்பெருமான் சேதனர் செய்த கர்மங்களுக்கேற்ப மறுபடி சம்சாரமோ மோக்ஷமோ தந்தாலும், ஆசார்யரோ தம்மை அண்டிய சிஷ்யனுக்கு எம்பெருமானிடம் புருஷகாரம் செய்து மோக்ஷமே பெற்றுத் தருகிறார்.  ஆகவே சேதனர் எம்பெருமானிடம் செல்வது கையைப் பிடித்துக் கார்யஞ்செய்து கொள்வது போல் எனில், ஆசார்யர் வழி செல்வது காலைப் பிடித்துக் கார்யஞ்செய்து கொள்வது போலாகும். எம்பெருமான் தானே சேதனரை ஆட்கொண்டதைவிட ஆசார்யரின் வழி ஆட்கொண்டதே பெரும்பான்மை ஆகும் என்றும் பூர்வாசார்யர்கள் திருவுள்ளம்.

ஆசார்யர்களைப் பற்றிப் பேசுங்கால், நம் பூர்வாசார்யர்களின் வ்ருத்தாந்தத்தைப் பார்த்தாலே போதும். அதாவது நம் குரு பரம்பரை. இவ்வாசார்ய பரம்பரை இன்றேல் நாமும் இன்று மற்ற பல கோடிப் பேர்களைப் போலேயன்றோ இருப்போம்!

ஸ்ரீ வைஷ்ணவம் (சனாதன தர்மம்), காலம் காலமாய் இடையறாது வருவது. த்வாபர யுக இறுதி தொடங்கி ஆழ்வார்கள் தக்ஷிண தேசத்து ஆற்றங்கரைகளில் தோன்றினர். ஸ்ரீமத் பாகவதத்தில் வ்யாஸ மஹரிஷி நதிக் கரைகளில் ஆழ்வார்கள் அவதரித்து எம்பெருமானின் குண சங்கீர்த்தனம் செய்து பக்தியைப் பரப்புவர் என்றார். அதன்படியே பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் புகழ்மழிசை ஐயன் அருள்மாறன் சேரலர்கோன் துய்ய பட்டநாதன் அன்பர்தாள் தூளி நற்பாணன் நன்கலியன் எனப் பதின்மர் (ஆண்டாள் நாய்ச்சியார், மதுரகவிகள் சேர்த்துப் பன்னிருவர்) அவதரித்து அவன் சங்கல்பத்தாலேயே நாலாயிரம் பாசுரங்களில் தத்வ  த்ரய நிர்ணயம் செய்து, நமக்கு அர்த்த பஞ்சக ஞான தானம் செய்து பரஞான பரம பக்தி நெறி காட்டியருளினர். ஆழ்வார்களின் பக்தி பெருக்கின் வெளிப்ப்பாடே அருளிச்செயல் என்று ப்ரசித்தமாகப் போற்றப்படும் நாலாயிர திவ்ய ப்ரபந்தம். அதிலும் அருளிச்செயலின் ஸாரமான அர்த்தங்கள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி என்னும் திவ்யப்ர்பந்தத்தில் உள்ளது.

அழ்வார்களுக்குப் பிறகு ஸ்ரீமன் நாதமுநிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி,ஆளவந்தார், பெரிய நம்பிகள், பெரிய திருமலை நம்பிகள்,திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், எம்பெருமானார், எம்பார், ஆழ்வான், முதலியாண்டான்,அருளாளப் பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், திருக்குருகைப் பிரான் பிள்ளான்,எங்களாழ்வான், நடாதூரம்மாள், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், கூர  குலோத்தம தாசர், திருவாய்  மொழிப் பிள்ளை, வேதாந்தாசார்யர், மணவாள மாமுநிகள் என அவிச்சின்னமான அத்விதீய ஆசார்ய பரம்பரை ஒன்று நமக்கு இவ்வரும் பொருள்களைத் தொடர்ந்து உபதேசித்து வருகிறது. இந்த ஆசார்யர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தெளிவான் மற்றும் விரிவான உரைகள் எழுதியுள்ளனர். இவையே நாம் படித்து பகவத் விஷயத்தில் மூழ்குவதற்காக நமக்கு அவர்கள் விட்டுச் சென்ற பெரும் செல்வம் ஆகும். எம்பெருமானின் கருணையால் இவ்வாசார்ய உபதேசங்கள் வழி நமக்கு அர்த்த விசேஷங்கள் மயர்வறத் தெளிவாகக் கிடைக்கின்றன.

உபதேச ரத்தின மாலையில் மாமுநிகள் நமக்குப் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களினால் அருளிச்செயல் அர்த்த விசேஷங்கள் எளிதாகப் புலப்படுகின்றன, அன்றேல் நாம் அறியாமை இருளில் கிடந்திருப்போம் என்கிறார். இப்பாசுரங்களின் அர்த்த கனம் தெறிந்தனரோ பூர்வர்கள் இவற்றை நித்யானுஸந்தேயமாய்க் கொண்டு வைத்தார்கள். இன்றும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் வெள்ளிக் கிழமை தோறும் சிறிய திருமடல் கோஷ்டி மிகப் பெரிதாய் சீரும் சிறப்புமாய் நடக்கக் காண்கிறோம். இதில் ஐந்து ஆறு வயதே ஆன சிறுவர்களும் அந்வயித்து எம்பெருமான் குணாநுபவம் செய்வதும் நடக்கிறது. மேலும் திருப்பாவை எல்லோரும் அறிந்ததே – பொதுவாகவும் மார்கழி மாதத்திலும் மூன்று நான்கு வயதே ஆன சிறுவர் சிறுமியர்களும் கூட ஆண்டாள் நாச்சியாரின் சிறந்த பாசுரங்களைப் பாடி மகிழ்வதை நாம் காணலாம்.

ஆகவே இவ்வளவும் நம் குரு பரம்பரையின் பெருமையேயன்றோ!

நம் பூர்வர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்:  https://acharyas.koyil.org .

ஆழ்வார்கள் வாழி! அருளிச் செயல் வாழி!
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து.

— உபதேச ரத்தின மாலை 3.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/simple-guide-to-srivaishnavam-guru-paramparai/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

2 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – குரு பரம்பரை”

  1. Dear Sir
    Thank you very much for your mail.
    I shall be grateful if you could kindly send me such divine texts in future
    too.
    Thanks and regards,
    Rajendran Srinivasan
    On 22 Apr 2016 22:21, “SrIvaishNava granthams in thamizh” wrote:

    > sarathyt posted: “ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத்
    > வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி < ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம் முந்தைய கட்டுரையில் ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்குமுள்ள
    > விசேஷ ஸம்பந்தத்தைப் பார்த்தோம். ”
    >

    Reply

Leave a Comment