ஆழ்வார்திருநகரி சித்திரைத் திருவாதிரை அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி முப்புரியூட்டிய திவ்யதேசம். அதாவது ஆழ்வார் மங்களாசாஸனம் செய்த திவ்ய தேசம், ஆழ்வார் (நம்மாழ்வார்) அவதார ஸ்தலம் மற்றும் ஆசார்யன் (குருகைக் காவலப்பன், எம்பெருமானார் (பவிஷ்யதாசார்யன்) மற்றும் மணவாள மாமுனிகள்) அவதார ஸ்தலம். நம் பூர்வாசார்யர்கள் தங்கள் வ்யாக்யானங்களில் ஆழ்வார்திருநகரியை மிகவும் கொண்டாடியுள்ளனர். இவ்வூரில் ஓடும் தாமிரபரணி நதி சிறந்த தீர்த்தமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த திவ்ய தேசம் விவரம் மேலும் கண்டறிய நம் வலைத்தளம் (https://azhwarthirunagari.koyil.org) பார்க்கவும்.

ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் இங்கே ஆதிநாதன் எம்பெருமானுடன் இருந்து விசேஷமாக நம் அனைவருக்கும் தன் எல்லை இல்லாத கருணையைப் பொழிந்து வருகிறார். இங்கே பெருமாள் பங்குனி சித்திரை மாதங்களில் இரண்டு ப்ரஹ்மோத்ஸவம் கண்டருளுகிறார். ஆழ்வார் வைகாசி மாதத்தில் திருவவதார உத்ஸவமும் மாசி மாதத்தில் திருமேனி ப்ரதிஷ்டோத்ஸவமும் ஹம்ஸக் கொடியேற்றத்துடன் கண்டருளுகிறார். மேலும் பவித்ரோத்ஸவம், வஸந்தோத்ஸவம் போன்ற பல உத்ஸவங்கள் கொண்டாடப்படுகின்றன. அத்யயன உத்ஸவமும் மிகச் சிறப்பாக பெரும் உத்ஸாஹத்துடன் கொண்டாடப்படுகின்றது.

ஆழ்வார் திருமேனியும் எம்பெருமானார் திருமேனியும் மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நதி தீர்த்தத்தைக் காய்ச்ச ஆழ்வார் க்ருபையால் கிடைக்கப் பெற்றவை. இங்கு ஆழ்வார் ஸந்நிதிக்கு மேற்கே பவிஷ்யதாசார்யன் ஸந்நிதி அமைந்துள்ளது. ஆழ்வாருக்கு இருப்பது போல் இவருக்கும் நான்கு மாட வீதிகள் மற்றும் ஸந்நிதித் தெருவும் திருவாய்மொழிப் பிள்ளையால் கலாப காலத்துக்குப் பிற்பாடு (இன்றைக்கு சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு) ஏற்படுத்தப்பட்டது.

இந்த பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில் எம்பெருமானார் ஜீயர் என்கிற ஆசார்ய பீடமும் பரம்பரையாக இருந்து வருகிறது. இந்த ஜீயரின் தலைமையில் இந்த ஸந்நிதி கைங்கர்யங்கள் மிகவும் சீரிய முறையில் நடக்கிறது. இந்த ஸந்நிதி விவரம் மேலும் கண்டறிய நம் வலைத்தளம் (https://bhavishyadhacharyan.koyil.org) பார்க்கவும்.

இங்கே எம்பெருமானாரின் திருநக்ஷத்ர மஹோத்ஸவம் ஆண்டுதோறும் பதினோறு நாட்களுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் காலை மாலை என இரு வேளைகளிலும் எம்பெருமானார் ஊஞ்சலில் இனிதாக வீற்றிருந்து கேட்டு அருளுகிறார். பதினோறாவது நாள் மாலையில் கந்தப்பொடி உத்ஸவம் கண்டருளி திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தை பூர்த்தி செய்கிறார்.

இந்த உத்ஸவத்தின் சாற்றுமுறை தினமான சித்திரைத் திருவாதிரையே இக்கட்டுரைக்கு விஷயம். அதை இப்போது நாம் இங்கே சிறிது அனுபவிப்போம்.

காலை

  • திருவாதிரை அன்று காலையில் எம்பெருமானாருக்கு விச்வரூபம் (முதல் சேவை) ஆன பிறகு ஊஞ்சலில் எழுந்தருளுதல்
  • ஆழ்வார் ஸந்நிதியில் ஆழ்வார் நித்ய திருமஞ்சனம் கண்டருளிய பின்பு அவர் உடுத்திக் களைந்த மாலை எம்பெருமானாருக்கு அனுப்பப்பட்டு அதை எம்பெருமானாருக்கு அணிவித்தல்
  • கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை சேவாகாலம் மற்றும் சாற்றுமுறை
  • ஜீயர் ஸ்வாமிக்கு பரிவட்டம், மாலை
  • கோஷ்டியாருக்கு தீர்த்தம், முதலியாண்டான், சக்கரைப் பொங்கல் ப்ரஸாத வினியோகம்
  • இந்த ஸமயத்தில் பொதுவாக பெருமாளுடைய சித்திரை உத்ஸவமும் சேர்ந்தே வரும். பொதுவாக பெருமாள் நான்காவது உத்ஸவம் கண்டருளுவார். சில ஸமயங்களில் ஐந்தாவது உத்ஸவமும் வரும். பெருமாள் காலை புறப்பாடு கண்டருளும் போது, எம்பெருமானார் ஸந்நிதித் தெரு எல்லையில் நின்று, கோஷ்டி சாற்றுமுறை செய்யப் படும். அதற்குள், எம்பெருமானார் பல்லக்கில் சாற்றப்பட்டு, பெருமாள் புறப்பாட்டில் இயல் கோஷ்டியின் முன்னே சேர்ந்து கொள்வார்.
  • புறப்பாடு முடிந்து பெருமாளுடன் எம்பெருமானாரும் வாஹன மண்டபத்தில் எழுந்தருளி, திருவந்திக் காப்பு மற்றும் தளிகை கண்டருளுதல்.
  • பின்பு பெருமாள் தன் ஸந்நிதிக்கும், எம்பெருமானார் ஆழ்வார் ஸந்நிதிக்கும் எழுந்தருளுதல்.
  • ஆழ்வார் நித்யப்படி திருமஞ்சனம் கண்டருளின பின்பு எழுந்தருளியிருக்கும் குறட்டில் (சிறு மண்டபத்தில்), எம்பெருமானாரும் கீழே எழுந்தருளுதல் (எம்பெருமானாரும் மாமுனிகளும் மட்டுமே ஆழ்வார் குறட்டிலேயே எழுந்தருளுவர் – மற்ற அனைத்து ஆழ்வார் ஆசார்யர்களும் குறட்டுக்கு வெளியிலேயே எழுந்தருளுவர்). ஆழ்வார் கிழக்குப் பார்த்தும் எம்பெருமானார் வடக்குப் பார்த்தும் எழுந்தருளியிருப்பர்.
  • இராமானுச நூற்றந்தாதி சேவாகாலம்.

மதியம்

  • எம்பெருமானார் ஆழ்வாரைப் பார்த்து எழுந்தருளுதல்
  • அரையர் தாளத்துடன் கண்ணிநுண் சிறுத்தாம்பு சேவித்தல். அர்ச்சகர் எம்பெருமானார் திருக்கைகளில் இருந்து ஆழ்வாருக்குத் திருத்துழாய் ஸமர்ப்பித்தல். அதன் பின்பு அரையர் ஆழ்வாருக்குக் கொண்டாட்டங்கள் சேவித்தல். அர்ச்சகர் ஆழ்வார் மாலை ஸ்ரீ ராமானுஜம் ஆகியவை எம்பெருமானாருக்கு சாதித்தல்.
  • இராமானுச நூற்றந்தாதி சாற்றுமுறை, மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் அருளியுள்ள எம்பெருமானார் விஷயமான நாள் பாசுரங்கள், வாழி திருநாமங்களுடன்.
  • தீர்த்தம், ஸ்ரீ ராமானுஜம், ப்ரஸாத வினியோகம்
  • ஆழ்வார் கைத்தல சேவையில் சத்ர (குடை) சாமரத்துடன், நடை பாவாடை விரித்து தன் ஸந்நிதிக்குத் திரும்புதல் (இது தினமும் உண்டு)
  • ஆழ்வார் எம்பெருமானாருக்கு ஸ்ரீ ராமானுஜம் மற்றும் மாலை ப்ரஸாதங்கள் அளித்தல்
  • எம்பெருமானார் ஆழ்வாரிடமிருந்து பிரியா விடை பெற்றுச் செல்லுதல்
  • எம்பெருமானார் மணவாள மாமுனிகள் ஸந்நிதிக்கு வருதல்
  • மணவாள மாமுனிகள் எம்பெருமானாருடன் அவர் பல்லக்குலேயே எழுந்தருளிப் புறப்படுதல்
  • இருவருமாக கூரத்தாழ்வான் ஸந்நிதிக்கு எழுந்தருளி அங்கே மண்டகப்படி கண்டருளுதல்

  • பின்பு அங்கிருந்து புறப்பட்டு எம்பெருமானார் கோயிலை அடைதல்
  • எம்பெருமானாருடன் மணவாள மாமுனிகள் அலங்காரத் தளிகை கண்டருளுதல்
  • எம்பெருமானார் ஸந்நிதியில் எல்லோருக்கும் ததீயாராதனம்

மாலை

  • எம்பெருமானார் ஸந்நிதியில் கத்ய த்ரய சேவாகாலம் மற்றும் சாற்றுமுறை
  • பெருமாள் சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டருளுதல்
  • பெருமாள் எம்பெருமானார் ஸந்நிதித் தெரு எல்லையில் எம்பெருமானாரை நோக்கி எழுந்தருளி இருத்தல்
  • பெருமாளுக்கு எம்பெருமானார் ஜீயர் சுருளமுது ஸமர்ப்பித்தல்
  • பெருமாளுக்கு பெரிய கற்பூர ஆரத்தி சேவை. அதே ஆரத்தியை எம்பெருமானாருக்கும் மாமுனிகளுக்கும் ஸமர்ப்பித்தல்.
  • எம்பெருமானாரும் மாமுனிகளும் திருவாராதனம் கண்டருளுதல்

இரவு

  • பெருமாள் புறப்பாடு முடிந்து அவர் மாலை ப்ரஸாதம் எம்பெருமானாருக்கு அனுப்புதல்
  • எம்பெருமானாருக்கு பெருமாள் மாலையை அணிவித்தல்
  • அருளிச்செயல் சேவாகாலம் – திருப்பல்லாண்டு, பெரிய திருமொழி 11ஆம் பத்து, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், பெரிய திருமடல், கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருவாய்மொழி 10ஆம் பத்து
  • சாற்றுமறை, மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் அருளியுள்ள எம்பெருமானார் விஷயமான நாள் பாசுரங்கள், வாழி திருநாமங்களுடன்.
  • எம்பெருமானார் மணவாள மாமுனிகளுக்கு பரிவட்டம், மாலை, முதலியாண்டான் மற்றும் பரிகரம் (ப்ரஸாதம்) அளித்தல்
  • ஜீயர் ஸ்வாமிக்கு பரிவட்டம், மாலை
  • கோஷ்டியாருக்கு தீர்த்தம், முதலியாண்டான், சுண்டல் மற்றும் புளியோதரை ப்ரஸாத வினியோகம்
  • எம்பெருமானாருக்குத் திருவிசாகம் (அரவணை/ஸயனம்) ஸமர்ப்பித்தல்
  • எம்பெருமானார் மணவாள மாமுனிகளுக்கு மாலை, முதலியாண்டான் மற்றும் திருவிசாக ப்ரஸாதம் அளித்தல்
  • மணவாள மாமுனிகள் எம்பெருமானாரிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு கோஷ்டியார் யதிராஜ விம்சதி சேவித்துக் கொண்டு தன் ஸந்நிதிக்கு எழுந்தருளுதல்
  • மணவாள மாமுனிகளுக்குத் திருவிசாகம் (அரவணை/ஸயனம்) ஸமர்ப்பித்தல்
  • கோஷ்டியாருக்கு ப்ரஸாத வினியோகம்

மறுநாள் மாலை (கந்தப்பொடி உத்ஸவம்)

  • எம்பெருமானார் தோளுக்கினியானில் புறப்பாடு கண்டருளுதல்
  • ஜீயர் மடத்து வாசலில் ஜீயர் ஸ்வாமிக்கு பரிவட்டம், மாலை, முதலியாண்டான், கந்தப்பொடி ப்ரஸாதித்தல்
  • கோஷ்டியாருக்கு தீர்த்தம், கந்தப்பொடி ப்ரஸாதித்தல்
  • சதுர்வேதி மங்கலத்தில் இராமானுச நூற்றந்தாதியுடன் புறப்பாடு கண்டருளுதல்
  • வடக்கு ரத வீதி வழியாக வந்து மணவாள மாமுனிகள் ஸந்நிதி வாசலில் மாமுனிகளை நோக்கி எம்பெருமானார் எழுந்தருளி இருத்தல்
  • எம்பெருமானாரின் மாலை, முதலியாண்டான் மாமுனிகளுக்கு ப்ரஸாதித்தல்
  • எம்பெருமானார் தன் ஸந்நிதி வந்தடைதல்
  • இராமானுச நூற்றந்தாதி சாற்றுமுறை
  • திருவந்திக் காப்பு
  • எம்பெருமானார் தளிகை கண்டருளுதல்
  • கோஷ்டியாருக்கு ப்ரஸாத வினியோகம்
  • எம்பெருமானார் தன் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளுதல்

இப்படி எம்பெருமான், ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் என்று அனைவரையும் சித்திரைத் திருவாதிரைத் திருநாளில் மங்களாசாஸனம் செய்து அனுபவிக்கும் வாய்ப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காது என்பது திண்ணம். இம்முறை அனுபவிக்கத் தவறியவர்கள் அடுத்த முறை தவறாமல் ஆழ்வார்திருநகரிக்கு வந்து இந்த வைபவத்தை அனுபவித்து மகிழலாம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment