அந்திமோபாய நிஷ்டை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehjdfwdeSmVY7IFdd?e=Z2zTOz

ஶாஸ்த்ரம் பகவானுக்கு நிரந்தரமாகக் கைங்கர்யம் செய்வதையே சிறந்த புருஷார்த்தமாக நிர்ணயித்துக் காட்டுகிறது. இப்பலனான கைங்கர்ய ப்ராப்தியை அடைவதற்குப் பல வழிகளைக் காட்டியிருந்தாலும் பக்தி மற்றும் ப்ரபத்தி அவற்றில் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றன. அவற்றிற்கும் மேலே இப்பலனை அடைய ஒரு ஆசார்யனிடம் முழுவதுமாக அடிமை பூண்டு இருப்பதையே தலை சிறந்ததாகவும் எளியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆஶிநோதி ய: ஶாஸ்த்ரார்த்தம் ஆசரே ஸ்தாபயதி அபி
ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் ஆசார்யஸ் தேந கீர்த்தித
:

எளிய விளக்கம்: ஆசார்யன் என்பவன் ஶாஸ்த்ரத்தைத் தான் முழுதுமாக அறிந்து, தான் அதை அனுஷ்டித்து பிறருக்கும் அதை உபதேசிப்பவன்.

மேலும் நம் பூர்வாசார்யர்கள் ஶாஸ்த்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசார்யன் என்பவன் ஸ்ரீமந்நாராயணனுக்கே ஆட்பட்டு இருந்து, அவனுடைய பரத்வத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு, ஞான பக்தி வைராக்யங்களில் சிறந்து விளங்கி, உபாயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமான் தவிர வேறு உபாயங்கள்), உபேயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமானுக்கும் அவன் அடியாருக்கும் தொண்டு செய்வதைத் தவிர வேறு பலன்கள்), தேவதாந்தரங்களிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும் என்று காட்டினர். நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த குணங்களில் சிறந்து விளங்கினர்.

பிள்ளை லோகாசார்யர் ஶாஸ்த்ரத்தின் ஸாரத்தை பூர்வாசார்யர்களின் உபதேசத்தின்படி ஸ்ரீவசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார். இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை அருளியுள்ளார். இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்) தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார். அந்திம = சிறந்த/எல்லையான, உபாய = வழி, நிஷ்டை = நிலைத்து நிற்றல். இதன் பொருள் “ஆசார்யனிடத்தில் முழுமையாக அடி பணிந்து இருத்தல்”.  பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தானே, இந்த முழு க்ரந்தமும் மாமுனிகளின் நேரடி உபதேசங்களைக் கொண்டு எழுதப்பட்டது என்றும் தான் ஆசார்யனின் வார்த்தைகளை ஏடுபடுத்த உதவும் ஓலைச் சுவடி, எழுத்தாணி போல மட்டுமே என்றும் சொல்கிறார். இது நம்பிள்ளையின் ஈடு காலக்ஷேபங்களை எவ்வாறு வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தினாரோ அதைப் போன்றதே. ஆக, இந்த நூலாசிரியரின் கருத்துப்படி இவை மாமுனிகளின் நேர் உபதேசங்களே

இந்த ஆசார்ய நிஷ்டை மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும், ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும், தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும், வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது. இந்த நிலைக்குச் சரம பர்வ நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு. பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும் ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் முறையே திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகவும் தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் இதை உபதேசித்துளார்கள்.

இந்த க்ரந்தம் மணிப்ரவாள நடையில் உள்ளது. விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவியாக, பல பகுதிகளாகப் பிரித்துப் பதிவிடுகிறோம்.

இத்தொடரில் இவ்விஷயமாக நம் பூர்வாசார்யர்களின் பெருமைகளை விரிவாக அனுபவிப்போம்.

இந்த க்ரந்தத்தை முழுமையாகத் தட்டச்சு செய்து கொடுத்த ஸ்ரீமதி ஸ்ரீதேவி வரதராஜனுக்கும், பிழைத் திருத்தம் செய்து கொடுத்த ஸ்ரீமதி ஸுதா நாராயணனுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org